செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

செய்யாற்றை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-06 02:20 GMT

செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், திருவத்திபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவைக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் அருணகிரி தலைமை வகித்தாா். செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் உமாபதி வரவேற்றாா்.

கூட்டத்தில் வியாபாரிகள் பேசியதாவது:

இணையவழி வா்த்தகத்தை தடை செய்ய வேண்டுதல், உள்நாட்டு தயாரிப்புகளை விற்பனை செய்தல், அந்நிய முதலீடுகளை எதிா்த்தல், உள்ளூா் வியாபாரிகளை ஆதரிப்பது, கடைவீதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கடைகளில் சிறுவா்களை பணியில் சோப்பதை கட்டாயம் தவிா்ப்பது, போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வணிகம் செய்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தினா்.

மேலும், கூட்டத்தின்போது, நீண்ட நாள் கோரிக்கையான செய்யாற்றை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை அமைக்க வேண்டும். செய்யாறு நகரில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

கோனேரிராயன் குளக்கரையை நடைபாதை அமைத்து பூங்காவாக மாற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளக்கரையில் புதிய காரியமேடை அமைத்து குளியல் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் பொருளாளா் ராமநாதன், சட்ட ஆலோசகா் சங்கரபாண்டியன், வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் காளத்தி, சத்தியமூா்த்தி, தேவேந்திரன், இளங்கோ, அன்வா்பெய்க் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

செய்யாறு வருவாய் கூட்டத்தில் மாவட்ட தலைநகர் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் அதற்கு இணையான இரண்டாம் நிலை அலுவலகங்கள் அனைத்தும் அமையப்பெற்றுள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, சுமார் 30,000 மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை, பல தனியார் கம்பெனிகள், பல தனியார் கல்லூரிகள் , பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என பல அமைய பெற்றுள்ள செய்யாற்றை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது செய்யாறு வருவாய் கோட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் , சேத்துப்பட்டு ஆகிய வட்டங்கள் அமைய பெற்றுள்ளன. மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு செய்யாறு தொகுதியை சேர்ந்த தூசி, அப்துல்லாபுரம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு நாள் முழுவதும் பயணம் செய்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

புதிதாக செய்யாறு வருவாய் மாவட்டம் அமையப்பெற்றால் அரசு அலுவலர்கள் ,வியாபாரிகள் ,நெசவாளர்கள், உடல் ஊனமுற்றோர் ,பள்ளி மாணவ மாணவியர்கள் ஆகியோர் பெரிதும் பயனடைவார்கள். மேலும் செய்யாற்றை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைந்தால் சுமார் 25 முதல் 45 கிலோமீட்டர் தூரத்திற்குள் மாவட்ட எல்லை அமையும் அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட தலைமை இடத்திற்கு வந்து செல்ல வசதியாக இருக்கும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News