காவல் உதவி ஆய்வாளர் கால் துண்டான பரிதாபம், திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது பேருந்து மோதியதில் அவரின் கால் துண்டானது.

Update: 2023-03-12 11:49 GMT

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மோரணம் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இதில் ராம கிருஷ்ணன் (வயது 55). என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராமகிருஷ்ணன் நேற்று இரவு 2.10 மணியளவில் ஆசனமாபேட்டை கிராமம் கலவை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது டாஸ்மாக் கடை எதிரில் பீட் நோட்டில் கையெழுத்திட்டு சாலை ஓரமாக மண் ரோட்டில் நின்றிருந்தார். அந்த சமயத்தில் காஞ்சிபுரத்திலிருந்து கலவை நோக்கிச் சென்ற தனியார் பஸ் திடீரென நின்று கொண்டிருந்த ராமகிருஷ்ணன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ராமகிருஷ்ணனின் இடது முழங்கால் துண்டாகி தொங்கியது.

உடனிருந்த ஊர் காவல் படை வீரர் சந்தோஷ் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஆம்பூலன்ஸ் ராமகிருஷ்ணனை செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர்கள் மருத்துவமனைக்கு வந்து காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை மேல் சிகிச்சைக்காக மியாட் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து, மியாட் மருத்துவமனையில்  சப் இன்ஸ்பெக்டர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மோரணம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

தொழிலாளியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கோடிதிப்பை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 31), தொழிலாளி. இவர், தனது நண்பருடன் அந்த பகுதியில் உள்ள ஒத்தையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பாதையை மறித்தபடி மோட்டார் சைக்கிளை நிறுத்துவிட்டு மங்கலத்தை சேர்ந்த பன்னீர்செல்வம், கீழ்பென்னாத்தூர் தாலுகா வழுதலங்குணம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், மங்கலம் ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது ஓரமாக அமர்ந்து மது அருந்துமாறு செல்வகுமார் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேரும் செல்வகுமார் மற்றும் அவரது நண்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த மங்கலத்தை சேர்ந்த அஜித்குமார், மருதநாயகம், மணியரசன் ஆகியோரும் அவர்கள் இருவரிடம் தகராறில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த செல்வகுமாரின் உறவினர்களிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அவர்கள் செல்வகுமார் தரப்பினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம், பிரகாஷ், தியாகராஜன், அஜித்குமார், மருதநாயகம், மணியரசன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதில் மணியரசன் என்பவர் சென்னை ஆவடியில் பட்டாலியன் போலீசாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News