வட மாநில தொழிலாளி உயிரிழப்பு உள்பட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

வட மாநில தொழிலாளி உயிரிழப்பு உள்பட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

Update: 2023-05-03 10:10 GMT

சத்தீஷ்கர் மாநிலம் ரேவியூட் டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்சார் (வயது 22). இவர் ஆரணி அடுத்த குரு மந்தாங்கள் கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருடைய செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவருடன் அதே மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பணியாற்றுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு இறைச்சி சாப்பிட்ட நிலையில் உடல் உபாதை ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் முகமது சம்சார் சேர்க்கப்பட்டார். காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் முகமது சம்சார் சாப்பிட்ட இறைச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு சமைத்தது என்பதும் கெட்டுப்போனதால் உடல் உபாதை ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து முகமது சம்சார் உடலை அவரது சொந்த ஊருக்கு இன்று இலவச வாகனம் மூலம் அனுப்புவதாக தெரிவித்தனர்.

போதைப்பொருட்கள் பறிமுதல்

வந்தவாசி அடுத்த அம்மையப் பட்டு பகுதி மீரஷா உசேன் நகர்  அப்துல் சமது என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது 7 மூட்டைகள் கொண்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தடை செய் யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்துல் சமதை கைது செய்து ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் தற்கொலை

தூசி அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமம் பெண்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (25). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் மகன் உள்ளான். கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் கீதா திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த கீதாவின் தந்தை வெங்கடேசன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு விரைந்து சென்று கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.

திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் கீதா இறந்துள்ளதால் செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News