பெண் டாக்டர் மீது தாக்குதல் உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் பெண் டாக்டரிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதால் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.;
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் பெண் டாக்டரிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதால் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அடுத்த புதுப்பாளையம் கூட் ரோடில் டாக்டர் அஞ்சனாத்திரி என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு பெண்கள் உள்பட நான்கு பேர் கும்பலாக நேற்று இரவு வந்தனர்.
அவர்கள் டாக்டர் அஞ்சனாத்திரியிடம் கிளினிக்கை காலி செய்துவிட்டு சாவி கொடுக்கும்படி கூறினர். அவர் மறுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 4 பேரும் சேர்ந்து டாக்டர் அஞ்சனாத்திரியை சராமரியாக தாக்கினார்கள். மேலும் கிளினிக்கிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அஞ்சானாத்திரி தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டாக்டரை தாக்கிய சம்பவத்தில் முருகன் என்ற தொழிலாளியை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் டாக்டரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சித்த மருத்துவர் கைது
செய்யாறு தாலுகா, தூசி அருகே கூழமந்தல் கிராமத்தில் ஒருவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வருவதாக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கண்காணிப்பாளர் பாண்டியன், ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தூசி போலீசார் கூழமந்தல் கிராமத்தில் உள்ள கிளினிக்கில் சோதனையிட்டனர்
அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் மரிய அமல் ராஜன் என்பதும் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது
இதையடுத்து கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரை, ஊசிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய அமல் ராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.