செய்யாறில் தனியார் நிதி நிறுவனம் மோசடி: போலீசில் முகவர்கள் புகார்

செய்யாறில் ரூ.25 கோடி வசூல் செய்து தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்ததாக முகவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Update: 2023-05-23 01:46 GMT

பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்கள் அளித்த முகவர்கள்

செய்யாறில் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு சிட்பண்டு என்ற பெயரில் கவர்ச்சிகரமான பொருட்கள் வழங்குவதாகக் கூறி பலர், ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்தனர்.

இதற்காக செய்யாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் கிளைகள் ஆரம்பித்து ஏஜெண்டுகள் மூலம் பணம் வசூலித்து வந்தனர்.

அந்த நிறுவனம் பொது மக்களிடம் பணத்தை பெற்றது. திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டது. இவ்வாறு பணம் வசூலித்த சில உரிமையாளர்கள் அதனை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து ஏராளமானோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

மோசடி புகாரின் பேரில் நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர் இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனுக்கள் அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- செய்யாறு பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்தோம். அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எங்களை தொடர்பு கொண்டு, பிறரையும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்குமாறு தெரிவித்தனர். மேலும் நீங்கள் இந்த நிறுவனத்தில் 15 பேரை முதலீடு செய்ய வைத்தால் நீங்கள் ஒரு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றனர்.

அதை நம்பி நாங்களும் முகவர்களாக செயல்பட்டு ஏராளமான பொது மக்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தோம். திடீரென நிதி நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர். தற்போது நாங்களும் எங்கள் மூலம் பணம் செலுத்திய பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தகராறு செய்கின்றனர். நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம். செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

எனவே மக்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News