ரூ.52 லட்சத்தில் பள்ளி கட்டிடங்கள், சிமெண்டு சாலை திறப்பு

வெம்பாக்கம் ஒன்றியத்தில் பள்ளி கட்டிடங்கள், சிமெண்டு சாலையை, எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

Update: 2023-03-18 12:07 GMT

வெம்பாக்கம் ஒன்றியத்தில் பள்ளி கட்டிடங்கள், சிமெண்டு சாலையை, எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

வெம்பாக்கம் ஒன்றியத்தில்.கனிகிலிப்பை கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதிய சிமெண்டு சாலை, பூனை தாங்கல் ஊராட்சி சேனியநல்லூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடை, மாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான கட்டிடம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு தலைமை வகித்தார்.வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகதிறந்து வைத்தார். இதில் மாவட்டஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன், சங்கர், தினகரன், ஞானவேல், திமுக நிர்வாகிகள் பார்த்திபன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய மருத்துவ குழுவினர் தர ஆய்வு

ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அக்ராபாளையத்தில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இதனை தேசிய உறுதி தர நிலை குழு டாக்டர்கள் சந்தோஷ்குமார் கடிலா, அகுவா மகேஸ்வர ராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர். புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம், பிரசவ அறை ஆகிய பிரிவுகளில் நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

தேசிய அளவில் செயல்படும் திட்டங்கள் செயல் முறைபடுத்துவது குறித்து அப்போது தர ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது மாவட்ட உதவி திட்ட மேலாளர் டாக்டர் ரமணன், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத், அக்ராபாளையம் டாக்டர் ஆனந்தன் மற்றும் மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், மருந்தாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், பணியாளர்கள் இருந்தனர்.

சாலைவசதி கேட்டு, மலைவாழ் மக்கள் உண்ணாவிரதம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா ஆத்திப்பாடி மலை கிராமத்திற்கு உட்பட்ட கீழ் வலசை பகுதியில் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் பயன்படுத்தி வந்த பாதை தனி நபர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. பாதை அமைந்த இடத்துக்கு அந்த நபர் வருவாய்த்துறையினர் மூலம் பட்டா பெற்று உள்ளார். இதனால் இந்த மலைவாழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வர சிரமப்பட்டு வந்தனர். எனவே தங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டு கலெக்டர் மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சாலை வசதி செய்து தரக் கோரி கீழ் வலசை மலைவாழ் மக்கள்  தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தாசில்தார் முகமது ரகுப், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அலுவலகத்துக்குள் அழைத்து செல்லப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை சிறிது நேரத்தில் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News