மின்னல் தாக்கி நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
திருவத்திபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமாயின.;
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
திருவத்திபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமாயின.
திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு மக்காத குப்பைகள் நகராட்சி வளாகத்தில் பின்புறம் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் செய்யாறில் தொடர் மழை பெய்த போது இடி-மின்னலுடன் பலத்த காற்று வீசியது. மின்னல் தாக்கிய போது, அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி குப்பை கிடங்கில் விழுந்தது. இதனால் அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செய்யாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காற்று வீசவே குப்பையில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்ததும் நகரமன்ற தலைவர் மோகனவேல், துப்புரவு ஆய்வாளர் மதனராசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதும் எரிந்து நாசமாயின. இதில் 35 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் குப்பை கிடங்கு அருகில் இருந்த நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள், பேட்டரி வண்டிகள் எரிந்து சேதமாகின.
கலசபாக்கத்தில் 1,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்
கலசபாக்கத்தில் கொட்டித் தீர்த்த மழையால் 1,000 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றன. இதில் கலசபாக்கம் பகுதியில் தொடர்ந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் கலசபாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை போன்றவை நிலத்தில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. சுமார் 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட கரும்பு, நெற் பயிர்கள் நாசம் அடைந்துள்ளன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதற்கான உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.