குழந்தை பிறந்த சந்தோஷம்: அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி உயிரிழப்பு

ஆரணி அருகே குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-05-09 10:14 GMT

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சென்னாத்தூர் லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் திருமலை வயது 30, நெசவுத் தொழிலாளி. இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி மரகதத்திற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் நேற்று இரவு திருமலை தனது நண்பர்களுடன் மதுகுடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் திருமலை அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது திடீரென அவர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தாமரைபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், திருமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து திருமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆராத்திரிவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் வயது 46. இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திலகவதியும் அதே கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் தொழிலாளியான பிரகாசம் தனது வீட்டின் மாடியில் நின்று கொண்டு தோட்டத்தில் உள்ள மாமரத்தில் உள்ள மாங்காய்களை தனது தம்பி மோகனுடன் சேர்ந்து பறித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது மரத்தின் மேல் பகுதியில் இருந்த மின்சார ஒயரில் பிரகாசத்தின் கைபட்டதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் மயக்கமடைந்த பிரகாசத்தை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஏலச்சீட்டு நடத்தி பண  மோசடி: தலைமறைவாக இருந்தவர் போலீசில் ஒப்படைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவர், அனக்காவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏலச்சீட்டு, குலுக்கல் சீட்டு மற்றும் பைனான்ஸ் நடத்தி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இதகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் தியாகராஜனை ஆரணி தாலுகா துருவம் கிராமத்தின் அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்து அனக்காவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News