அரிய வகை நாக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுப்பு

செய்யாறு அருகே அரிய வகை நாக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-12 01:06 GMT

 கண்டெடுக்கப்பட்ட நாக்கன்னி புடைப்புச் சிற்பங்கள்

செய்யாறு அருகே விஜயநகர காலத்திற்கும் முற்பட்ட 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை நாகக்கன்னி புடைப்பு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமம் மாரியம்மன் கோயில் அருகில் பழமை வாய்ந்த நாகக்கன்னி புடைப்புச் சிற்பங்கள் இருப்பதை வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து ஆய்வாளர் கூறியதாவது, 

கோயில்களில் உள்ள அல்லது கோயில் அருகில் உள்ளஆலமரம், வேப்பமரம், குளக்கரை அரசமரம் ஆகியவற்றின் அடியில் நாகர்களின் உருவங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவதால் தோஷங்கள் நீங்கும் நம்பிக்கை இன்றளவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் மாரியம்மன் கோயில் வடக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாக கன்னி புடைப்புச் சிற்பங்கள் அரிய வகையாக உள்ளது. அதன் தொன்மை, அடையாளம் கருதி விஜயநகர கால அமைவாக கருதினாலும், அக்கால த்திற்கும் முற்பட்டவையாக கருத முடிகிறது. நாககன்னி புடைப்புச் சிற்பம் 44 சென்டிமீட்டர் உயரம், 22 சென்டிமீட்டர் அகலம் உடையதாக உள்ளது. 

இரு நாகங்கள் இணைந்து பின்னியபடி உள்ளது .இவைகள் முதல் சுருள் வட்டத்தில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுழல் வட்டத்தில் நந்தி வடிவம் மிகவும் தேய்ந்த நிலையில் மூன்றாம் சுருள் வட்டத்தில் விநாயகர் உருவம் மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. மூன்று உருவங்கள் ஒருங்கிணைந்து இருப்பது அரிய வகையாக உள்ளது. மேலும் இந்த சிற்பத்தின் பக்கத்தில் இன்னொரு நாகக்கன்னி புடைப்புச் சிற்பம் உள்ளது. 

இதன் உயரம் 38 சென்டிமீட்டர், அகலம்15 சென்டிமீட்டர் ஆக உள்ளது .இந்த நாககன்னி புடைப்புச் சிற்பம் பார்ப்பதற்கு மனித உருவம் போன்றும், இருதலை நாகம் போன்றும் காட்சி அளிக்கிறது   என வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் கை. செல்வகுமார் தெரிவித்துள்ளார் .

இவ்வகை புடைப்புச் சிற்பம் அபூர்வமானதும், ஆச்சரியம் தரக்கூடிய வகையிலும் உள்ளது. மேலும் பழைய சினிமா படக்காட்சிகளில் வருவதைப் போன்று காணப்படுகின்றது. இந்த நாககன்னி புடைப்பு சிற்பங்கள் வேறு இடத்தில் கிடைத்து, தோண்டி எடுக்கப்பட்டு அரச மரத்தடியில் வைத்து பிரதிஷ்டை செய்து தற்போது வழிபாட்டில் உள்ளதாகவும், மேலும் அம்மன் கோயில் விழா காலங்களில் நாக புடைப்பு சிற்பங்களுக்கு சிறப்பு அபிஷேக ம் நடப்பதாகவும் வழக்கமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News