செய்யாறு ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

செய்யாறு, ஒன்றியக்குழு தலைவர் மீது புகார் கூறி, அனைத்து கட்சி கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்

Update: 2023-03-10 08:15 GMT

செய்யாறு ஒன்றிய கவுன்சில் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றிய கவுன்சில் கூட்டம் காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் ஆறு பேரும், அதிமுக அதன் தோழமைக் கட்சிகள் நான்கு பேரும் உள்ளிட்ட 10 ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன் பேசுகையில்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆன எங்களுக்கு எந்த வேலை ஒதுக்கீடு செய்து தருவதில்லை. நிதி ஆதாரம் இல்லை என்றும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் ஒன்றிய குழு தலைவர் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்று புகாரை முன்வைத்து அவர் தலைமையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் திமுக மற்றும் தோழமை கட்சியின் கவுன்சிலர் கோபால் கூறுகையில்,  ஒன்றிய குழு தலைவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்,  கட்சிக்காரர்களுடன் கலந்து ஆலோசிப்பதில்லை,  அனைத்து டெண்டர்களையும் அவரே எடுத்துக் கொள்கிறார் கவுன்சிலர்கள் எவரையும் மதிப்பதில்லை, எங்களால் நம்பி வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்ய இயலவில்லை. ஒன்றிய குழு தலைவர் மீது அதிருப்தி இருப்பதால் நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம் என்று அவர் கூறியவுடன், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல் உள்ளிட்ட அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

ஒன்றியக் குழு கூட்டத்தில் விவாதங்கள் நடைபெறாமல், உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் பாதியில் முடிந்தது.

திமுக, விசிக, அதிமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி ஒன்றிய கவுன்சிலர்களும், ஒன்றிய குழு தலைவர் மீது அதிருப்தி தெரிவித்து கூட்டாக கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியது குறித்து, ஒன்றியக் குழு தலைவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

Similar News