காசநோய் இல்லா திருவண்ணாமலை: விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் இல்லா திருவண்ணாமலை விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Update: 2023-03-28 03:15 GMT

நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய மாவட்ட கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காசநோய் இல்லா திருவண்ணாமலை- 2025 என்ற விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், காசநோய் இல்லா திருவண்ணாமலை-2025 என்ற இலக்கை அடைய சுகாதார துறை சீரிய முறையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதினால் காசநோயின் பரவலை குறைக்க முடிகிறது. அதற்கு சான்றாக மத்திய அரசால் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெள்ளி விருது வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நேரடி கள ஆய்வில் அதிக காசநோயாளர்களை கண்டுபிடித்து குணப்படுத்துதல், மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்துதல், தனியார் மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கும் காசநோய் உள்ளவர்களை அரசுக்கு பரிந்துரைத்தலை ஊக்குவித்தல், காசநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு நவீன முறையில் ரத்த பரிசோதனை மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், தனியார் பங்களிப்பின் மூலமாக ஊட்டசத்து குறைபாடுள்ளவர்களுக்கு (காசநோய் பாதிப்பு அடைந்தவர்கள்) ஊட்டசத்து பெட்டகம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது என்றார்.

தொடர்ந்து அவர் தனியார் பங்களிப்பின் மூலமாக 30 நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதில் துணை இயக்குனர் (காசநோய்) அசோக், ஒருங்கிணைப்பாளர் தேசிய சுகாதார குழுமம் அருண், நலக்கல்வியாளர் சேஷாத்திரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்யாறு

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மோரணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய காசநோய் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

டாக்டர் சந்தியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முருகவேல், காசநோய் பிரிவு அலுவலர் ராம்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சம்பத் வரவேற்றார்.

இதில் டாக்டர் சந்தியா தேசிய காசநோய் தினம் குறித்தும், காசநோய் வருவதற்கான காரணம், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் காச நோய் பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம் என்றும், 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லா திருவண்ணாமலை உருவாக்க அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் கூறினார்.

ஆரணி

ஆரணி அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தலைமை மருத்துவ அலுவலர் மம்தா, டாக்டர் கவிமணி, கருணாகரன்,  களப்பணி உதவியாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பணியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காசநோய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சங்கீதவாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் காசநோய் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். இரும்பேடு ஊராட்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காசநோய் இல்லா திருவண்ணாமலை, குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

Tags:    

Similar News