மக்களுடன் முதல்வர் திட்ட நிறைவு முகாம்; ஆட்சியர் பங்கேற்பு

செய்யாறில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நிறைவு விழாவில் ஆட்சியர், எம் பி, எம் எல் ஏ பங்கேற்றனர்.

Update: 2024-09-06 02:40 GMT

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சி நரசமங்கலம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட நிறைவு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சி நரசமங்கலம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட நிறைவு முகாம் நேற்று  பிற்பகல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர். ஜோதி , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு கட்ட முகாம் நிகழ்வுகளுக்குப் பிறகு நிறைவு நிகழ்வான இம் முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நல திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். எம்.பி, தரணி வேந்தன், எம் எல் ஏ  ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சீ.பார்வதி சீனிவாசன், உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் முறையே நல திட்ட உதவிகளை வழங்கினர்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான சாதி சான்றிதழ் வழங்குதல், பட்டா மாற்றத்திற்கான சான்றுகள், வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், பல்வேறு நிவாரண உதவிகள், விவசாயிகளுக்கான மரக்கன்றுகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நல திட்ட உதவிகள் மேடையில் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு முன்னர் அங்கன்வாடி குழந்தைகள் மலர் கொத்து கொடுத்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.

பின்னர் 15க்கும் மேற்பட்ட சேவை அரங்குகளையும், அங்கன்வாடி பணியாளர்களின் குழந்தைகள் நல கண்காட்சியினையும் சிறப்பு விருந்தினர்களால் பார்வையிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராமபிரதீபன், சார் ஆட்சியர் பல்லவிவர்மா, முதல்வர் தனிப்பிரிவு அலுவலர் அரவிந்தன், வட்டாட்சியர்கள் துளசிராமன், பெருமாள், வெங்கடேசன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், பீடிஓக்கள் மயில்வாகனன், ஷீலா அன்பு மலர், பாண்டியன், ராஜன் பாபு, பரணிதரன் உள்ளிட்ட இதர துறை சார்ந்த அலுவலர்கள், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்யாறு மேற்கு ஒன்றியம் சேராம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தொடர்ந்து வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூசி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்.

Similar News