ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்க கோரி செய்யாறு நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-05 02:53 GMT

 போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாறு நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இரண்டு மாத நிலுவை ஊதியத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சியில் மொத்தம் 123 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 63 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு மாத ஊதியம் வழங்க நகராட்சி சார்பில் ஒப்பந்ததாரருக்கு காசோலையாக வழங்கப்படுவதாக தெரிகிறது.

தற்போது உள்ள ஒப்பந்ததாரர் 1. 6. 2023. முதல் ஒப்பந்த பணி மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படாமல் உள்ள இரண்டு மாத ஊதியத்தை வழங்கினால் மட்டுமே பணி மேற்கொள்வோம் என தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ், மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் மதனராசன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .  ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனைத் தொடர்ந்து பணி ஒப்பந்தக்காரர் காஞ்சிபுரத்திலிருந்து உடனடியாக வரவழைக்கப்பட்டார். நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பொறுப்பு குமரன், நகர மன்ற தலைவர் மோகனவேல் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஒப்பந்தக்காரர் தினேஷ் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் போலீசார் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .

அப்போது பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டு மாத நிலுவை ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கலைந்து சென்று தங்கள் பணிக்கு சென்றனர்.

Tags:    

Similar News