செய்யாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.3 லட்சம் பறிப்பு

செய்யாறு அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.3 லட்சம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2022-04-14 10:15 GMT

செய்யாறு டவுன் காந்தி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 54). இவர் வெம்பாக்கம் அடுத்த பில்லாந் தாங்கல் பகுதியில் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். பன்னீர்செல்வமும் விற்பனையாளர் நேதாஜியும் வழக்கம்போல், நேற்று இரவு கடையை மூடி விட்டு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 850 ஐ எடுத்துக் கொண்டு சென்றனர். 

அப்போது பன்னீர்செல்வம் வெம்பாக்கம் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் குருநாதன் என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு செய்யாறு வழியாக,  சுமங்கலி ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல், பைக்கை நிறுத்தி அவர்கள் மீது மிளகாய் பொடி தூவினர். பின்னர் குருநாதனையும், பன்னீர் செல்வத்தையும் சரமாரியாக அந்த கும்பல் தாக்கியது.

பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 850 ஐ பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து பன்னீர்செல்வம் மோரணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News