திருவண்ணாமலை அருகே ஆசிட் கேன் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே ஆசிட்கேன் வெடித்ததில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்

Update: 2021-12-24 06:45 GMT

ஆசிட் கேன் வெடித்ததில் பலியான தொழிலாளி சுகுமார்

வெம்பாக்கம் அருகே ஆசிட் கேன் வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, உக்கம் பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி ( 29).

இவர் ஆக்கூர் கூட்ரோட்டில் சிமெண்டு ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மகாஜனபக்கம் காலனியை சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகன் சுகுமார் (28). என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் இன்று காலை வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  அங்குள்ள சுவற்றின் ஓரம் பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆசிட் கேனை திறக்க முயன்றார். முடியாததால் சிறிய கத்தியால் கேனை அறுக்க முயன்றார்.

அப்போது திடீரென ஆசிட் கேன் வெடித்து சிதறியது. இதில் சுகுமார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.அவருடைய உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதுபற்றி தகவலறிந்ததும் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு உடல்சிதறி இறந்து கிடந்த சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.மேலும் இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News