திருவண்ணாமலை அருகே தாய், மகளை வழிமறித்து 6 பவுன் செயின் பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே தாய், மகளிடம் வழிப்பறி கும்பல் 6 பவுன் செயினை பறித்து சென்றனர்.

Update: 2022-04-16 11:36 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சுமங்கலி கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகை மலை. இவரது மனைவி எல்லம்மாள் (வயது 28). இவர் வெங்கட்ராம் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

எல்லம்மாளின் தாயார் மகேஸ்வரி. இவர்கள் இருவரும் வேலூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்தபின் பஸ்ஸில் சுமங்கலி கூட்டு ரோட்டில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் பின்னால் வாலிபர்கள் 3 பேர் பைக்கில் வந்தனர். 

திடீரென அவர்களை வழி மடக்கி கத்தியை காட்டி அணிந்திருந்த செயினை கழற்றி தருமாறு மிரட்டினர். அப்போது அதிலிருந்த ஒரு வாலிபர் எல்லம்மாள் மற்றும் மகேஷ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தார். பின்னர் பைக்கில் மின்னல் வேகத்தில் 3 வாலிபர்களும் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து எல்லம்மாள் மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே இடத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் ஊழியர்களை மறித்து திருட்டு கும்பல் ரூ.3 லட்சத்தை பறித்துச் சென்றது. மீண்டும் அதே இடத்தில் தாய், மகளிடம் கும்பல் செயின் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News