செய்யாறு அருகே அண்ணன், தம்பி உள்பட 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி

செய்யாறு அருகே குளிக்க சென்ற அண்ணன்- தம்பி உள்பட 3 சிறுவர்கள், ஏரியில் மூழ்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-10-22 07:53 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் சிறுங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி; கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் வரதராஜ் (வயது 12), வருண்குமார் (10). வரதராஜ், பாப்பாந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பும், வருண்குமார் அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். 

அதே கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி, தட்சிணாமூர்த்தி. இவரது மகன் சுதாகர் (7). அதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் வரதராஜ், வருண்குமார், சுதாகர் ஆகிய 3 சிறுவர்களும்   பாப்பாந்தாங்கல் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.

ஏரியின் ஒரு பகுதியில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது, 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். நீச்சல் தெரியாததால்,  அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்ததும் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

நீரில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் உடலை மீட்டு,  செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி 3 பேர் இறந்தத சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News