தூசி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது

தூசி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-06 06:06 GMT

பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில்  கைது செய்யப்பட்ட தாமோதரன், கணபதி.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள பாவூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 36). இவரின் கணவர் ஏகாம்பரம். கணவன்-மனைவி இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்துக்கு மருந்து வாங்கச் சென்றனர். 

அங்கு, மருந்து வாங்கி விட்டு அங்கிருந்து திரும்பி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். தூசி மெயின் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சென்ற போது அந்த வழியாக பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீெரன சத்யா அணிந்திருந்த நான்கரை பவுன் தாலி சரடை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து ஏகாம்பரம் தூசி போலீசில் புகார் செய்தார்.  இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் நேற்று இரவு அப்துல்லாபுரம் கூட்ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி ஒரே மோட்டார்  சைக்கிளில் வந்த 3 பேரை சைகை காண்பித்து நிறுத்தினர். அதில் ஒருவர் கீழே இறங்கி தப்பியோடி விட்டார். 2 பேர் சிக்கினர்.

சிக்கிய இருவரும், காஞ்சீபுரத்தை அடுத்த திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தாமோதரன், கணபதி என்றும், தப்பியோடியவர் சங்கர் என்றும் தெரியவந்தது. பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பாவூர் கிராமத்தை சேர்ந்த சத்யாவின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடை பறித்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கணபதி, தாமோதரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News