முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு வியாபாரி கொலை
ஆரணியில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு வியாபாரி படுகொலை , தலைமறைவான வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.;
படுகொலை செய்யப்பட்ட மணிகண்டன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் போத்து என்ற மணிகண்டன் (வயது 26). காஞ்சீபுரத்தில் தந்தை பன்னீர்செல்வம், தாய் ராதா ஆகியோருடன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2-ந் தேதி தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊரான ஆரணிக்கு வந்த மணிகண்டன் அங்கு அவரது அண்ணன் வீட்டில் தங்கினார்.
நேற்று இரவு 10 மணி அளவில் தர்மராஜா கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது இவருடன் சிறுவயதிலிருந்து பழகி வந்த கரிமா என்ற விக்னேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டார். மேலும் அவருடன் இருந்த மனோஜ் என்பவர் மணிகண்டனை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியுள்ளார்.
அப்போது விக்னேஷ் கீழே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுவயது நண்பரும் தி.மு.க. வக்கீல் அணி நிர்வாகியுமான கார்த்தி மற்றும் மணு ஆகியோரும் அருகில் இருந்த செங்கற்களை எடுத்து மணிகண்டன் தலை மீது ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்ததால், கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விக்னேஷ், மனோஜ், மணு ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வக்கீல் கார்த்தியை தேடி வருகின்றனர்.