கொரோனா பாதிப்பால் 2 ஆண்டுகளாக முடங்கி போன தாலிக்கயிறு தொழில்

கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக தாலிக்கயிறு தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் வேதனை.

Update: 2021-08-16 12:27 GMT

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப்பகுதிகளான வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாலிக்கயிறு தயாரிப்பு தொழில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விசைத்தறிக் கூடங்களில் கிடைக்கும் நூல் இழைகளை வாங்கி வந்து, நூல் இழைகளை இணைத்து தாலிக்கயிறு தயார் செய்கின்றனர். உடுமலை பகுதியில் தயாரிக்கப்படும் தாலிக்கயிறு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் தாலிக்கயிறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை அடைகின்றனர்.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், உடுமலை பகுதியில் மாதத்திற்கு சுமார் 2 டன் தாலிக்கயிறு உற்பத்தியாகிறது. விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் நூலை மூலப்பொருளாகக் கொண்டு தாலிக்கயிறு தயாரிக்கப்படுகிறது. மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்ட சுடுநீரில் நூலை ஊற வைத்து, பின் வெயிலில் உலர்த்தி பேக்கிங் செய்யப்படுகிறது. ஆடித் திருவிழா, வரலட்சுமி நோன்பு, திருமணக் காலங்களில் தாலிக்கயிறு விற்பனை அதிகமாக இருக்கும். மேல்மருவத்தூர் மற்றும் அம்மன் கோயில்களுக்காக அதிக அளவில் தாலிக்கயிறுகள் விற்பனையாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் தாலிக்கயிறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாலிக்கயிறு தயாரிக்கும் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எங்கள் தொழில் மீதும் அரசு கவனம் செலுத்தி, எங்களை காப்பாற்ற வேண்டும், என்றனர்.




Tags:    

Similar News