லாரி டிரைவரை மிரட்டி ரூ.17 ஆயிரம் பறிப்பு

முத்தூர் அருகே, லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.17 ஆயிரத்தை, நான்கு பேர் பறித்து சென்றனர்.

Update: 2022-09-15 05:48 GMT

கத்தியை காட்டி மிரட்டி, லாரி டிரைவரிடம் ரூ. 17 ஆயிரம் பறிப்பு.

நாமக்கல் மாவட்டம் தத்தாதிரிபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் கவுதம் (வயது 32). லாரி டிரைவர். இவர் பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள தனியார் கோழி தீவன உற்பத்தி நிறுவனத்தில் இருந்து, லாரியில் கோழி தீவனத்தை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தார். இவர் ஓட்டி வந்த லாரி முத்தூர் - காங்கயம் ரோடு செட்டியார்பாளையம் பகுதியில் நள்ளிரவு 11.45 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ரோட்டோரத்தில் நின்ற இரண்டு பேர் லிப்ட் கேட்பது போல், குறுக்கே கை காட்டினார்கள். இதனால் லாரி டிரைவர் கவுதம் லாரியை நிறுத்தினார். அப்போது கைகாட்டிய  இரண்டு பேருடன், இருட்டில் மறைந்திருந்த மேலும் இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேர் லாரியின் கேபினில் ஏறி உள்ளே சென்றனர். பின்னர் லாரி டிரைவர் கவுதமிடம் அந்த நபர்கள், திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பணத்தை கொடுக்குமாறு மிரட்டினர். பின்னர் லாரி டிரைவர் கவுதம் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்து 500-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். 

இதுகுறித்து, லாரி டிரைவர் கவுதம் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Similar News