விவசாய பட்ஜெட்: உழவர் சங்கம், வேளாண் ஆர்வலர்களிடம் கருத்து கேட்க கோரிக்கை

விவசாய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, உழவர் சங்கம், வேளாண் ஆர்வலர்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டுமென்று, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2021-06-10 04:12 GMT

இதுகுறித்து, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதற்கு,முதலமைச்சருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய அளவில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் விவசாய சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றன, தமிழ்நாட்டில் நடந்த, 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது,

தற்போது அதை நிறைவேற்றுவதற்காக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதற்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது, வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு உழவர்களின் சங்கங்களையும், வேளாண் ஆர்வலர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கருத்து கேட்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

எனவே, வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு, உழவர்கள் சங்கங்களை அழைத்து கருத்து கேட்க வேண்டும். வேளாண் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கருத்துக்களை கேட்க, முதலமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோரை,  தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொள்வதாக, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News