பாண்டிாறு, புன்னப்புழா திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை

பாண்டியாறு, புன்னப்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-14 02:00 GMT

பாண்டியாறு - கோப்பு படம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிடைக்கும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் மட்டும், மோயாறு வழியாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வந்து சேர்கிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் பயன்பெறுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் தண்ணீர்,  3 சிற்றாறுகள் வழியாக கேரளா, கர்நாடகா செல்கிறது. இவற்றை தடுத்து மோயாற்றுடன் இணைத்தாலே, காவிரி கடைமடை வரை பாசனத்துக்கு கொண்டு சேர்க்க முடியும் என பொதுப்பணி துறை நீரியல் வல்லுநர்கள், தமிழக விவசாயிகள் கருதுகின்றனர்.

இது குறித்து, தமிழக சிறுகுறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: பவானிசாகர் அணைக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால், பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இத்திட்டத்தில், மோயாற்றுடன், பொன்னானி ஆறு, பாண்டியாறு, ஸ்ரீமதுரை ஆறு ஆகிய ஆறுகளை இணைத்தால் 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

இதற்கான திட்டத்தை, அதிகாரிகள் தயார் செய்து வைத்தனர். பாண்டியாறு தமிழகத்தில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்கிறது. பிறகு கேரளா கீழ்நாடுகானியில் இருந்து புன்னப்புழா ஆறாகவும் சென்று, சாலியாறாக அரபிக் கடலில் கலக்கிறது. இதேபோல் பொன்னானி ஆறு, பந்தலூர் தாலுகா ரிச்மவுன்ட் எஸ்டேட்டில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து பந்தலூர் தொண்டியாளம், நெல்லியாளம் வழியாக பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து கேரள மாநிலத்தில் வெள்ளேரி ஆறாக மாறி கேரள- கர்நாடக மாநிலங்களின் வனச்சரகத்தின் வழியாகச் சென்று கபினி ஆற்றில் கலக்கிறது.

தேவர் சோலை மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி ஸ்ரீமதுரை ஆறு, கம்மாத்தி, புத்தூர் வயல் வழியாக கார்குடியில் மோயாற்றுடன் கலக்கிறது. பாண்டியாறு, பொன்னானி, ஸ்ரீமதுரை ஆகிய 3 ஆறுகளை இணைக்கு பாண்டியாறு, புன்னப்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Tags:    

Similar News