சிறு தானிய இயக்கத்தில் ஈரோட்டை சேர்க்க வேண்டும்: திருப்பூர் எம்பி. வேண்டுகோள்

அறிவிக்கப்பட்ட 18 மாவட்டங்களின் பட்டியலில் ஈரோடு மாவட்டம் சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது

Update: 2021-08-21 11:59 GMT

 திருப்பூர் எம்பி. சுப்பராயன் 

சிறுதானிய இயக்கம் செயல்படுத்தும் மாவட்டங்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு திருப்பூர் எம்பி  கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பூர் எம்பி. சுப்பராயன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட, சிறு தானிய இயக்கத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்க்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி, கடம்பூர், பர்கூர் ஆகிய மலைப் பகுதிகள் முழுவதும் மானாவாரி நிலப்பகுதிகளாகும்.

இம்மலை மக்களின் வாழ்வாதாரமே விவசாயம் தான்.மலை மக்களின் பிராதான விளை பொருளாக ராகி, தினை, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானிய வகைகளும், எள், உச்செள்ளு, அவரை, துவரை போன்ற வகைகளுமாக உள்ளன. மலைப்பகுதி மக்கள் காலம் காலமாக பயிரிட்டு வரும் சிறு தானிய வகைகளுக்கு நியாய விலை கிடைக்காததால் மாற்றுப்பயிர்களுக்கு மாறி,தங்கள் உணவாதாரத்தை இழந்து வருகிறார்கள்.

மலைமக்களின், குறிப்பாக ஏழைகளின் உணவாக இருந்த ராகி, இன்று வசதி படைத்தவர்களும் தேடி, விரும்பி உண்ணும் உணவாக மாறியுள்ளது. மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் சிறு தானியங்கள் எந்தவித ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படாமல் விளை விக்கப்படுபவை ஆகும்.

கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட வேளாண்நிதிநிலை அறிக்கையில், சிறு,குறு தானிய வகைகளின் உற்பத்தியை பெருக்கவும், சந்தைப்படுத்தவும், விளைவிப்பவர்களுக்கு  நியாயவிலை கிடைக்கவும் சிறு தானிய இயக்கத்தை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால், இவ்வியக்கம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 மாவட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஈரோடு மாவட்டம் சேர்க்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளிலும், சமவெளியிலும் உள்ள மானாவாரிப்பகுதிகளிலும் சிறு தானிய உற்பத்தி செய்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், குறிப்பாக மலைப்பகுதியில் சமூகத்தின் அடித்தட்டில் வாழும் பட்டியலின, பட்டியல் பழங்குடியினத்தவரின் நலனை காக்கும் அடிப்படையிலும், அவர்கள் பாரம்பரியமாக செய்து வரும் சிறு தானிய உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு தானிய இயக்கத்தில் ஈரோடு மாவட்டத்தையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன், என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Tags:    

Similar News