ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதாக, திருப்பூரில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Update: 2021-07-24 06:45 GMT

அவிநாசியில் உள்ள புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு, இன்று ஆய்வு செய்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திருப்பூரில் உள்ள முக்கிய கோவில்களில், இன்று  ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அவர்,   கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவிலில் பராமரிப்பு, தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், அவிநாசியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள தெப்பக்குளம், திருத்தேர் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர், விரைவில் குடமுழுக்கு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். அவிநாசி கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின் போது அமைச்சர் சாமிநாதன், எம்எல்ஏ, செல்வராஜ், கலெக்டர் வினீத் ஆகியோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News