அவிநாசி: விதிமீறி இயங்கிய பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு கொரோனா!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விதிமுறை மீறி செயல்பட்டபனியன் நிறுவனத்தில், 47 பெண்களுக்கு கொரோனாஅ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-02 15:03 GMT

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த,  முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பனியன் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் செயல்படாமல் உள்ளன.

இந்நிலையில், அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட அணைப்புதூர் அருகே,  திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள  தனியார் பனியன் நிறுவனம் ஒன்று, விதிமுறை மீறி செயல்படுவதாக, வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு சோதனை செய்ததில், நிறுவனத்தில் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்தது தெரியவந்தது. அங்கு பணியாற்றிவர்களை பரிசோதனை செய்தபோது, அவர்களின் 47, பெண் தொழிலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அனுமதியின்றி இயங்கிய நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை, உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News