10 வருடங்களுக்குப் பிறகு நெல்லை மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமனம்

கடந்த 2010 ல் அஜய்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படவில்லை

Update: 2021-06-10 13:34 GMT

விஷ்ணுசந்திரன்- ஐஏஎஸ், மனைவி ஆஷா அஜித்-ஐஏஎஸ்

நெல்லை மாநகராட்சி நெல்லை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, நகராட்சிகள், தச்சநல்லூர் டவுன் பஞ்சாயத்து ஆகியவற்றை இணைத்து 1996 ஆம்ஆண்டு உருவாக்கப்பட்டது. மாநகராட்சி அந்தஸ்து பெற்ற பிறகு பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், நெல்லை என நான்கு மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. 55 வார்டுகள் இடம்பெற்றன.

நெல்லை மாநகராட்சி அந்தஸ்து பெற்ற பிறகு நெல்லை மாநகராட்சி கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. சில ஐஏஎஸ் அதிகாரிகளும், மாவட்ட வருவாய்துறை அதிகாரி அந்தஸ்தில் ஆன அதிகாரிகளும் , நகராட்சி நிர்வாகத் துறையில் இருந்து அதிகாரிகளும் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர்.

சுதீப் ஜெயின், தீரஜ்குமார், ஹர்மந்தர்சிங் போன்ற ஐஏஎஸ் அதிகாரிகளும் கமிஷனராக இருந்துள்ளார்கள். கடந்த 2010 ல் அஜய்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படவில்லை. இப்போது நெல்லை மாநகராட்சிக்கு விஷ்ணுசந்திரன் என்ற ஐஏஎஸ் அதிகாரி புதியகமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நேரடி ஐஏஎஸ் கேடர் அதிகாரி.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமிகோயில் இணைஆணையராக நியமிக்கப்பட்டார். இப்போது நெல்லை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ( இவரது மனைவி ஆஷா அஜித். இவரும் ஒரு ஐஏஎஸ் ஆபீஸர்தான். தற்போது நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக உள்ளார்.

நெல்லையில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் சுமார் ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. எந்தப் பணியும் முழுமை அடையாமல் அரைகுறையாகவே உள்ளது. பேரூந்து நிலையங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் இடிக்கப்பட்டு விட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். புதிய கமிஷனர் விஷ்ணுசந்திரன் ஸ்மார்ட்சிட்டி பணிகளை விரைவுபடுத்தவேண்டும். ஊழல் இல்லாத நெல்லை மாநகராட்சியை உருவாக்கவேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.



Tags:    

Similar News