திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி - வனத்துறையினர் அறிவிப்பு

Update: 2021-10-16 06:20 GMT

 மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவில்.

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோவில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ஆவணி மாதம் நடைபெறும் உறியடி திருவிழா, புரட்டாசி கருட சேவை நிகழ்ச்சி ஆகியவை ரத்து செய்யப்பட்டது. நம்பி கோவிலை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News