திருச்சியில் சிறுவனைக் கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருச்சியில் சிறுவனைக் கடத்திய 2 பேரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;
திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணேசாபுரம் புதுத்தெருவில் கடந்த மாதம் 10-ம் தேதி 17 வயது சிறுவனை பணத்திற்காக கடத்தி சென்றுள்ளனர்.
கடத்தல் தொடர்பாக சிறுவனின் தந்தை ரமேஷ்ராஜ் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் பணத்திற்காக தனது மகனை பொன்மலை கணேசாபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் பிரபு (32), பாலகிருஷ்ணன் என்பவரது மகன் சோனி (எ) பாரத் (21), ரெங்கசாமி என்பவரது மகன் செந்தில்குமார் (37), மற்றும் ஒரு பெயர் தெரியாத நபர் கடத்தி சென்றதாக தெரிவித்திருந்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பொன்மலை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடியாக 3பேர் கைது செய்யப்பட்டனர்.
கடத்தப்பட்ட சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கடத்தல் வழக்கில் ஈடுபட்ட தலைமறைவான மற்றவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் சிறுவர் என்பதால் அந்த நபரை சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபு மீது பொன்மலை, அரியமங்கலம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் நிரவி ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் சோனி (எ) பாரத் ஆகிய இருவரும் தொடர்ந்து இதுபோன்று ஆட்கடத்தல், கொலை மிரட்டல், கொலை மற்றும் பொதுமக்களின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்
குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், இவர்களது குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு,
மேற்படி இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள பொன்மலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த பரிந்துரையின் பேரில்,
திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதன்படி இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.