வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளை நூதனமாக ஏமாற்றி நகை திருடிய பெண் கைது

வீட்டில் தனியாக இருந்த தாய்-மகளுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து நனை திருடி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-23 13:42 GMT

பைல் படம்.

ரயில் பயணங்களின்போது டிப்டாப் உடை அணிந்தவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு மயக்க பிஸ்கட் அல்லது மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவங்கள் பற்றி நாம் அறிந்து இருப்போம். ஆனால், உறவுக்காரர்கள் வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்து அவர்கள் அணிந்திருந்த நகையை பெண் ஒருவரே திருடிச் சென்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அனையூர் நங்கைமொழி பகுதியைச் சேர்ந்த ராமையா மனைவி குப்பம்மாள் (73) என்பவர் தனது மகள் சுப்புலட்சுமி (48) என்பவருடன் கடந்த 21.04.2023 அன்று தனது வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அவரது உறவினரான திரவிய ரமேஷ் மனைவி சொர்ணலெட்சுமி (30) என்பவர் குப்பம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் சொர்ணலெட்சுமி மயக்க மருந்து கலக்கப்பட்ட ஜூசை குப்பம்மாள் மற்றும் சுப்புலட்சுமிக்கு குடிக்க கொடுத்து அவர்கள் இருவரும் மயக்கம் அடைந்த பின்னர் சுப்புலட்சுமி கழுத்தில் இருந்த 3½ சவரன் தங்கச் செயினை சொர்ணலெட்சுமி திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து நேற்று (22.04.2023) குப்பம்மாள் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பவுலோஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, சொர்ணலெட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சொர்ணலட்சுமியிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 1,05,000/- மதிப்புள்ள 3½ சவரன் தங்கச் செயினையும் போலீசார் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News