24 ஆண்டுகளுக்கு பின் திருச்செந்தூரில் வரலாறு காணாத மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீர்

திருச்செந்தூரில் 24 ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத மழை. ஒரே நாளில் 220 மி.மீ. மழை பெய்ததால் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.

Update: 2021-11-25 14:30 GMT

திருச்செந்தூரில் இன்று பெய்த கனமழையால் முருகன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.

திருச்செந்தூரில் 24 ஆண்டுகளுக்கு பின் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. ஒரே நாளில் 220 மி.மீ. மழை பெய்ததால் முருகன் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வரலாறு காணாத மழையை சந்தித்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூர் பகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 220 மிமீ மழை பதிவாகியுள்ளது. வரலாற்று புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்தால் டிசம்பர் 6, 1997ம் ஆண்டு திருச்செந்தூரில் 280 மி.மீ. மழை ஒரே நாளில் பதிவானது. 24 ஆண்டுக்கு பிறகு திருச்செந்தூர் வரலாறு காணாத மழையை பெற்றுள்ளது.

இதனால் திருச்செந்தூர் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. வெளிபிரகாரத்திலும் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதுமட்டுமல்லாமல் திருச்செந்தூர் புறநகர் பகுதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் ஒரு பக்கம் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபுறம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மாலை 5 மணி நிலவரப்படி (மி.மீ.)

தூத்துக்குடி துறைமுகம் 258 மி.மீ.

காயல்பட்டினம் 246 மி.மீ.

திருச்செந்தூர் 220 மி.மீ.

ஸ்ரீவைகுண்டம் - 138 மி.மீ.

குலசேகரன்பட்டினம் - 138 மி.மீ.

சாத்தான்குளம் - 105 மி.மீ.

ஓட்டப்பிடாரம் - 100 மி.மீ.

Tags:    

Similar News