அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகள் வழங்கல்.. பனை பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு..

தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில், காயல்பட்டினத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2022-12-02 12:21 GMT

அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஓடக்கரையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதில் 10 ஆண் குழந்தைகளும், 15 பெண் குழந்தைகளும் என மொத்தம் 25 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

அந்த குழந்தைகளுக்கு நாற்காலி வசதி இல்லாமல் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை இருந்தது. தரையில் அமர்ந்து படிப்பது குழந்தைகளுக்கு சிரமமாக இருந்து வந்தது. இதனை அறிந்த தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்கமல் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலி வழங்க ஏற்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அங்கவாடி குழந்தைகளுக்கு நாற்காலி வழங்கும் விழா ஓடக்கரை அங்கன்வாடி மையத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவரும், தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ராஜ்கமல் தலைமை தாங்கினார்.

காயல்பட்டினம் நகராட்சி 17 ஆவது வார்டு கவுன்சிலர் ராமஜெயம், லீடூ டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி, பனை பாதுகாப்பு இயக்க காயல்பட்டினம் நகர செயலாளர் காயல் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி கலந்து கொண்டு குழந்தைகளுக்கான 25 நாற்காலிகளை அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு அவர் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், அங்கன்வாடி உதவியாளர் வளர்மதி, அங்கன்வாடி பணியாளர் முத்துலட்சுமி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்கமல் சிறப்பாக செய்திருந்தார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாங்காலிகள் வழங்கியதற்கு அந்தப் பகுதி மக்கள் சார்பில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News