குலசை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரை குத்திய இளைஞர்!

குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணையின்போது, உதவி ஆய்வாளர் மற்றும் இளைஞர் ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டனர்.

Update: 2023-02-06 14:59 GMT

ஸ்குரு டிரைவரால் குத்தப்பட்டதில் காயமடைந்த கோகுல் சந்திரசேகர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுலுள்ள குலசேகரன்பட்டினம் காமராஜ்நகரை சேர்ந்தவர் பவானி (வயது 20). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து முடித்து உள்ளார். இவர் வீட்டின் அருகே வசித்து வந்த கோகுல் சந்திரசேகர் (23).

இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கோகுல் சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள கருப்பட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் காதலுக்கு பவானியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனால், கோகுல் சந்திரசேகரும், பவானியும் கடந்த சனிக்கிழமை நாகர்கோவிலில் உள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, பவானியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இதுதொடர்பான விசாரணைக்காக காதல் தம்பதிகள் இன்று குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது, இந்த சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது இரு குடும்பத்தாரும் அங்கு இருந்து உள்ளனர்.

இந்த நிலையில் பவானியின் அண்ணன் முத்துப்பாண்டி (26) திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் கோகுல் சந்திரசேகரை கழுத்தில் குத்த முயன்று உள்ளார். அதனைப் பார்த்த உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தடுத்தபோது அவர் வலது கையில் குத்துப்பட்டது.

மேலும், கோகுல் சந்திரசேகருக்கு கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று விட்டு மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காயம் அடைந்த கோகுல் சந்திரசேகர் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முத்துப்பாண்டியிடம் குலசேகரன்பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையின் கணவரையும், உதவி ஆய்வாளரையும் காவல் நிலையத்தில் வைத்தே குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News