திருச்செந்தூரில் 120 கிலோ கஞ்சா பறிமுதல்: எஸ்.பி., அதிரடி நடவடிக்கை

திருச்செந்தூர் பகுதியில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-05-09 12:54 GMT

கஞ்சா கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி "ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.0" மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் நேற்று (08.05.2023) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் காந்திபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது, அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

உடனே, தனிப்படை போலீசார் அந்த சரக்கு வாகனத்தில் மூன்று மூட்டைகளில் இருந்த 120 கிலோ கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

மேலும், கஞ்சா பறிமுதல் தொடர்பாக திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜிடம் தகவல்களை கேட்டறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் சரக்கு வாகனத்தில் மொத்த மதிப்பு ஒரு கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News