தூத்துக்குடியில் திடீர் மழை : பாதாள சாக்கடை குழிகளில் மழை நீர்

தூத்துக்குடியில் திடீர் மழை :- பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தேங்கிய மழை வெள்ளத்தால் பணிகள் சுணக்கம்.

Update: 2021-05-08 05:31 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல சீதோஷ்ண நிலை இருந்து வருகிறது. இன்று அதிகாலை முதலே வானம் இருண்டு மழைக்கு அச்சாரமிட்டன. இந்நிலையில் 7 மணிக்கு தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரதத்திலேயே இடியுடன் கூடிய கனமழையாக வெளுத்து வாங்கியது. சுமார் அரை மணி நேரம் இடைவிடாது பெய்த கனமழையால் பூமி குளிர்ந்து வெப்பம் வெளியேறியது.


தூத்துக்குடி மாநகராட்சியில் பழைய மாநகராட்சி சாலை, காசுக்கடை பஜார், ரயில் நிலைய சாலை, திருச்செந்தூர் சாலை, பிரையன்ட் நகர், பிஅண்ட் டி காலனி, ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட பல முக்கிய இடங்களிலும் கதிர்வேல் நகர், ராஜீவ் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. மாநகராட்சியின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டபணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு பள்ளமாகி கிடப்பதால் தண்ணீர் தேங்கி பணிகளில் சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மழை, மாவட்டம் முழுவதும் பரவலாக தற்போதும் பெய்து வருவதால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News