கழுகுமலையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்-ஒருவர் கைது

Update: 2021-06-10 18:47 GMT

புகையிலை பொருட்கள் பறிமுதல்

கழுகுமலை பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 437 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கழுகுமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் தலைமையில் உதவி ஆய்வாளர் காந்திமதி, காவலர் முத்துராமன், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ரமேஷ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கழுகுமலை அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்த பழனி மகன் சுரேஷ் கண்ணன் (27) என்பவரது வீட்டருகே உள்ள குடோனை சோதனை செய்த போது அதில் 16 மூடைகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சுரேஷ் கண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சட்டவிரோத தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக அவரது குடோனில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கழுகுமலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் கண்ணனை கைது செய்து அவரிடம் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 437 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கழுகுமலை சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவற்றை பார்வையிட்டார். பின்னர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசாரை அவர் பாராட்டினார்.

Similar News