கோவில்பட்டியில் பரிகார பூஜை என்ற பெயரில் நூதன முறையில் திருடிய தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கைது

Update: 2021-06-09 13:33 GMT

கோவில்பட்டியில் பரிகார பூஜை என்ற பெயரில் நூதன முறையில் தங்க நகைகளை திருடிய தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கைதுசெய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி பேச்சியம்மாள். இவரது குடும்ப பிரச்னை காரணமாக தங்கள் குடும்பத்திற்கு நேரம் சரியில்லை. உயர் பலி வாங்கும் நிலையில் உள்ளதாகக் கூறி கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் ஊழியரான முத்துராமலிங்கம்(44) தங்க நகையை வைத்து பூஜை செய்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்னை தீர்ந்துவிடும் என்று கூறியுள்ளார்.


அதை நம்பிய பேச்சியம்மாள் தனக்குச் சொந்தமான இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் அவரது சகோதரர் காசிராஜன் நான்கரை பவுன் தங்க நகையை வைத்து மே மாதம் 7ஆம் தேதி இரவு பேச்சியம்மாள் வீட்டில் வைத்து முத்துராமலிங்கம் பூஜை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரு குடும்பத்தினரையும் வெளியே நிற்க சொல்லிவிட்டு பேச்சியம்மாள் வீட்டிற்குள் உள்ள பூஜை அறையில் இரண்டு கூஜாவில் நகைகளை வைத்துள்ளதாகவும், 40 நாள்கள் கழித்து தான் கூஜாவை திறக்க வேண்டும் எனக் கூறிவிட்டு முத்துராமலிங்கம் சென்றுள்ளார்.

இதுபோல, பேச்சியம்மாள் வீட்டு அருகே உள்ள மாரியம்மாளும் ஜோதிடத்தை நம்பி கடந்த ஜுன் மாதம் 1ஆம் தேதி அரை பவுன் தங்க நகையை வைத்து பரிகாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துராமலிங்கம், அய்யனாரை தொடர்பு கொண்டு மீண்டும் யாருக்காவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எனக் கேட்டதையடுத்து சந்தேகம் அடைந்த அய்யனார். அறையில் உள்ள கூஜாவை திறந்து பார்த்த போது அதில் தங்க நகை ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் பூஜை செய்த மற்றவர்களுக்கு இது பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். அவர்களும் முத்துராமலிங்கம் பூஜை செய்து கொடுத்த கூஜா மற்றும் டிபன்பாக்ஸ் ஆகியவற்றை திறந்து பார்த்த போது அதில் நகை இல்லை என்பது தெரியவந்தது. இதையெடுத்து பாதிக்கப்பட்ட 3 பேரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து முத்துராமலிங்கத்தினை கைது செய்தனர்.பரிகார பூஜை என்ற பெயரில் நூதன முறையில் நகை மோசடி செய்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News