தேசிய விளையாட்டு தினம்: கோவில்பட்டியில் கேக் வெட்டி கொண்டாடிய ஹாக்கி வீரர்கள்

கோவில்பட்டியில் இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஹாக்கி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடடினர்.

Update: 2021-08-29 06:33 GMT

கோவில்பட்டியில் தயான்சந்த் உருவம் பொறித்த கேக்கினை வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடிய ஹாக்கி வீரர்கள்.

ஜப்பான் டோக்கியோவில் சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இதனை தொடர்ந்து இந்திய ஹாக்கி அணியை கவுரவிக்கும் வகையில், இந்தியாவின் ஹாக்கியின் தந்தை தயான் சந்த் பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி தயான் சந்த் பெயரில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 116வது தயான்சந்த் பிறந்த நாள் கொண்டாடப்படுவதையொட்டியும், தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ உசி பள்ளி மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் முத்துராஜ் தலைமையில் தயான்சந்த் உருவம் பொறித்த கேக்கினை வெட்டி, பட்டாசு வெடித்து ஹாக்கி வீரர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடினர். தொடர்ந்து ராஜீவ் காந்தி ஹாக்கி கிளப் மற்றும் பாரதி ஹாக்கி கிளப் இடையிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

இந்த வ.உ.சி பள்ளி மைதானத்தில் கடந்த 1952ம் ஆண்டு இந்தியாவின் ஹாக்கியின் தந்தை தயான்சந்த் விளையாடியது மட்டுமின்றி ஹாக்கி வீரர்களுக்கு பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக அணியின் செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, முன்னாள் ஹாக்கி வீரர் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சமுத்திர பாண்டியன், வ.வு.சி பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த், பாரதி ஹாக்கி கிளப் செயலாளர் சந்தானம் , ஹாக்கி தேசிய நடுவர் முருகன், கோவில்பட்டி ஹாக்கி அகடமி செயலாளர் காளிமுத்து பாண்டி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News