தெருவிளக்கு எரியவில்லை என்று புகார்.. விளக்கையே அகற்றியதால் பொதுமக்கள் அதிர்ச்சி…

கோவில்பட்டி அருகே தெரு விளக்கு எரியவில்லை என மனு அளித்த ஒரு வாரத்தில், மின் கம்பத்தில் இருந்து விளக்கு அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-12-01 16:14 GMT

சம்பந்தப்பட்ட மின் கம்பம்.

உலகம் முழுவதுமே சில வேடிக்கையான சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவது உண்டு. அந்த சம்பவங்களை நினைத்து சிரிப்பதா? வேதனைப்படுவதா? என நமக்கு நினைக்கத் தோன்றும். ஆம்! அப்படியொரு சம்பவம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த அந்த சம்பவம் குறித்து பார்ப்போம்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தோனுகால் ஊராட்சிக்குட்பட்ட படர்ந்தபுளி கிராமம் கீழ தெரு பகுதியில் பட்டியிலினத்தை சார்ந்தவர்களும், அருந்ததியர் இன மக்களும் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி தெரு முகப்பில் உள்ள மின் கம்பத்தில் பெரிய மெர்குரி விளக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது.

பத்து நாட்கள் மட்டும் எறிந்த நிலையில் பின்னர் பல மாதங்களாக அந்த விளக்கு எறியாமல் இருந்துள்ளது. மேலும், அந்த மின் கம்பமும் பழுதான நிலையில் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல முறை அதிகாரிகள் தரப்பினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் அந்த விளக்கை எரியவைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி ஒன்றியக்குழு சார்பில் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று நீண்ட நாட்களாக எறியாமல் உள்ள தெரு விளக்கை சரி செய்ய வேண்டும், பழுதடைந்த அந்த மின்கம்பதை நீக்கி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும், அந்தப் பகுதியில் மயான கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும், சாலை வசதி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதால், விரைவில் மின் விளக்கு சரி செய்யப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அந்தப் பகுதி பொதுமக்களும் காத்திருந்தனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக பழுதடைந்த மின் கம்பத்தை மட்டும் மாற்றி விட்டு புதிய மின் கம்பத்தை வைத்துச் சென்றனர் அதிகாரிகள்.

பழைய மின் கம்பத்தில் இருந்த விளக்கு புதிய மின் கம்பத்தில் இல்லாமல் அகற்றி சென்று விட்டனர். மின் விளக்கு இருந்தால் தானே எரியவில்லை என புகார் அளிப்பார்கள் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் மின் விளக்கை அகற்றிவிட்டார்களோ? என அந்தப் பகுதி தங்களுக்குள் கேலியாக பேசிக் கொண்டனர்.

சில நாட்கள் மட்டுமே எரிந்த மின்விளக்கு அகற்றப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க என அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இளைஞர்கள் சிலர், என்ன ஒரு புத்திசாலித்தனம்?, என்னடா இது புது டிரண்டா இருக்கு? என வடிவேலு பட காமெடி வசனங்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News