கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா

கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா நடைபெற்றது

Update: 2021-11-09 17:13 GMT

கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா நடைபெற்றது

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில், கயத்தாறு திருநீலகண்டேஸ்வரர் கோவில்களில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா நடைபெற்றது

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.விழாவின் 6ம் திருநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு கோயிலிலிருந்து சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வெளிப்பிரகாரத்தில் திருவீதியுலா நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, கோயில் வெளிப்பிரகாரத்தின் ஒருபகுதியில் மாலை 7.15 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்து வருகிறது. வள்ளி, தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. விழாவின் 6-ம் திருநாளான இன்று பகல் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனை வழிபாடும், மாலை 5.30 மணியளவில் சுவாமி வீரவேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களத்துக்கு வந்தடைந்தார். அதனை தொடர்ந்து 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. விழாவின் 7-ம் திருநாளான நாளை இரவு 7 மணிக்கு கழுகாசலமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது. 12-ம் தேதி இரவு 7.40 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் செய்திருந்தார்.

கயத்தாறு:

கயத்தாறு திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலையும், மாலையும் 4 கால பூஜை நடைபெற்றது. 6-வது நாளான இன்று முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்வதற்கு முன்பு நரகாசுரனை வீரபாகு வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. பின்னர் முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

Tags:    

Similar News