கோவில்பட்டியில் தனியார் பேருந்து- கார் மோதல்.. பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு…

கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-12-19 16:09 GMT

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து- கார்.

கோவில்பட்டி கிருஷ்ணாநகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக் (வயது 23). இவர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி முடிந்ததும் கீர்த்திக் தனது நண்பர்களான கோவில்பட்டி அருகே வானரமுட்டியை அடுத்த வெயிலுகந்தபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேலதெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23), கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1 ஆவது தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ. மேட்டுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (23) ஆகியோருடன் கோவில்பட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.


இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகில் உள்ள பாலத்தில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


காரில் இருந்த அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரி கண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தீயணைப்பு துறையினர் வீரர்கள் உதவியுடன் காருக்குள் இடிபாடுகளின் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இதேபோல் தனியார் பேருந்தில் பயணம் செய்ததில் காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டி நகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News