கரணம் தப்பினால் மரணம்: சுரங்கப்பாலத்தில் பெண்கள் சாகச பயணம்

கடம்பூர் அருகே கோடங்கால் கிராமத்தில் ரயில்வே சுரங்கபாலம் மழைநீரால் நிரம்பியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

Update: 2021-11-09 09:29 GMT

சுரங்கபாலத்தின் சுவர் மேல் ஏறி கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் செல்லும் பெண்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலூகா கடம்பூர் அருகேயுள்ளது கோடங்கால் கிராமம். இந்த கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாதையில் இருந்த ரயில்வே கேட் அகற்றப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2வது ரயில்வே தண்டவாள பணியின் போது ரயில்வே சுரங்கபாலம் அமைக்கப்பட்டது.

பாலம் அமைக்கப்பட்டது முதல் ஒவ்வொரு தடவையும் மழை பெய்யும் போது சுரங்கபாலத்தில் வழியாக செல்ல முடியமால் இக்கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ரயில்வே சுரங்கபாலம் முழுவதும் மழை நீர் நிரம்பியுள்ளதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருத்துவ உதவிக்கு செல்ல வேண்டும் என்றால் கடம்பூருக்கு தான் இப்பகுதி மக்கள் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் ரயில்வே சுரங்கபாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை காட்டுபகுதியில் நடத்து சென்று கடம்பூருக்கோ மற்ற பகுதிகளுக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் இரவு நேரங்களில் காட்டுபாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. வேறு வழியில்லமால் அவசர தேவைக்காக ஆபத்தினை உணரமால் கழுத்தளவு தண்ணீர் மக்கள் நடந்து செல்கின்றனர் அல்லது சுரங்கபாலத்தின் சுவர் மேல் ஏறி கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் செல்லும் நிலை உள்ளது.

கடந்த ஒருவார காலத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி இருப்பதால் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், மேலும் நடமாடும் ரேஷன் கடை மூலமாக இக்கிராமத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சுரங்கபாலம் வழியாக வாகனம் வரமுடியாத நிலை இருப்பதால் தற்பொழுது வரை இந்த மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், தங்களுக்கு இந்த ரெயில்வே சுரங்கபாலம் தேவையில்லை என்றும், மாற்று பாதை அமைத்து தரவ வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News