பயிர்களை சேதப்படுத்தும் பன்றி, மான்கள் பட்டாசு வெடித்து விரட்டும் விவசாயிகள்

Update: 2020-12-24 05:37 GMT

கோவில்பட்டி விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றி மற்றும் மான்களால் அறுவடைக்கு தயராக இருந்த 1000 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் கொட்டும் பனியில் விடிய,விடிய பட்டாசு வெடித்து பயிர்களை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள முத்தலாபுரம் குறுவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 1000 ஏக்கருக்கு மேலாக மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, மல்லி, கம்பு, பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்கள் செடிகளாக மாறி நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முத்தலாபுரம் குறுவட்ட பகுதியில் அதிகளவில் பன்றிகள் மற்றும் மான்கள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

இரவு நேரங்களில் வரும் பன்றிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசி, மல்லி, கம்பு, பருத்தி, சோளம் பயிர்களை சேதப்படுத்தி, கடித்து குதறி செல்கின்றன. பன்றிகள் மற்றும் மான்களை விரட்ட நிலங்களை சுற்றி கயிர்களை வைத்து வளை போன்ற அமைப்பு ஏற்படுத்துதல், கம்பு வைத்து விரட்டுதல் என பல முயற்சி மேற்கொண்டு தோல்வியடைந்த விவசாயிகள் தற்பொழுது பட்டாசு வெடித்து அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு நாளைக்கு 300 ரூபாய் வரை செலவு செய்து பன்றிகள் மற்றும் மான்களை விரட்டி வருகின்றனர். இரவு 7மணிக்கு குடும்பத்துடன் தங்களது நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் விடிய,விடிய கொட்டும் பனியில் காத்திருந்து பன்றிகள் மற்றும் மான்களை விரட்டி தங்களது பயிர்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News