ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்...

ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று தொடங்கிய நிலையில்

Update: 2021-05-14 03:36 GMT

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டது.

இந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரி இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதன் பேரில், தமிழக அரசும் அனுமதி அளித்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி உற்பத்தியான ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணியும் தொடங்கியது.

ஸ்டெர்லைட் கண்காணிப்பு குழு தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில்ராஜ் இதனை கொடியசைத்து துவங்கி வைத்தார். ஆக்சிஜன் நிரப்பிய முதல் டேங்கர் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 டன் ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவ்க்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரம் (cooler) பழுதடைந்ததால், நள்ளிரவு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது குளிர்விப்பான் இயந்திரத்தைப் பழுது நீக்கும் பணியில் அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இயந்திரத்தை சரி செய்து, மீண்டும் உற்பத்தியை தொடங்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் என்பதால், அடுத்த 3 நாட்களுக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 



 


Tags:    

Similar News