திருத்துறைப்பூண்டி அருகே திருட்டு செல்போன் தகராறில் ஒருவர் கொலை

திருத்துறைப்பூண்டி அருகே திருட்டு செல்போனால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-28 16:05 GMT

பாரதிமோகன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மணலி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் கார்பண்டர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரிடம் 700 ரூபாய்க்கு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இது அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ராஜமாணிக்கம் என்பவரின் செல்போன் என தெரியவந்ததன் பேரில் பாரதிமோகன் செல்போனை ராஜமாணிக்கத்திடம் ஒப்படைத்துள்ளார் .

இதனையடுத்து செல்போனுக்காக கொடுத்த 700 ரூபாயை திருப்பி தருமாறு ராஜ்குமாரிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது .இதனையடுத்து அடுத்தநாள் ராஜ்குமார் மற்றும் அவரது அம்மா ரேணுகா தேவி ,தம்பி பாலமுருகன் ஆகியோர் பாரதிமோகன் வீட்டுக்கு சென்று அவரை வெளியே வரச் சொல்லி கையில் இருந்த உருட்டுக்கட்டையால் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வந்தார் .இந்நிலையில் இன்றைய தினம் பாரதிமோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டுவரும் திருத்துறைப்பூண்டி தாலுகா காவல் துறையினர் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி ரேணுகா தேவி மற்றும் பாலமுருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜ்குமார் என்பவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News