நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க விவசாய சங்க தலைவர் பாண்டியன் கோரிக்கை
நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாய சங்க ஒருங்கிணைப்புகுழு தலைவர் பாண்டியன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.;
திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக கன்னியாகுமரி முதல் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள நிலையில் மழையால் சேதம் அடைந்துள்ள சம்பா,தாளடி பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 6030 ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்பிருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய நிலையில் தற்போதைய அரசு நிவாரணம் குறைத்து வழங்குவது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மேலும் குறுவைபயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வழங்கியது எந்த விதத்திலும் போதாது ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும், எனவே உடனடியாக தமிழக அரசு இது குறித்து மறுபரிசீலனை செய்து நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.