விபத்தில் சிக்கிய மாணவரின் உயிரை காப்பாற்றிய செவிலியர்: பாெதுமக்கள் பாராட்டு

மாணவரின் உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

Update: 2021-12-04 04:00 GMT

திருவாரூர் அருகே விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த செவிலியர் வனஜா.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடுத்த கருவாக்குறிச்சி காலனி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் வசந்த் (20). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு கல்வி பயின்று வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக பைக்கில் பைபாஸ் சாலை அருகே வந்த போது செம்மறியாடுகள் கூட்டமாக சாலையின் குறுக்கே கடந்துள்ளது.

இதனை எதிர்பார்க்காத வசந்த் திடிரென பிரேக் போட ,நிலை தடுமாறிசெம்மறியாடு கூட்டத்தில் மோதியதில் பலத்த காயமடைந்து ரோட்டில் மயங்கி கிடந்தார். அப்போது, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராக வேலைபார்க்கும் கோட்டூர் தோட்டத்தை சேர்ந்த வனஜா (39) என்பவர் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி நோக்கி தனது பைக்கில் வந்தார். சாலையில் வாலிபர் ஒருவர் அடிபட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை செவிலியர் வனஜா பரிசோதித்தார்.

அதில் வாலிபரின் இதய துடிப்பு குறைந்து அபாய கட்டத்தில் இருப்பதை கண்டு அவரின் நெஞ்சு பகுதியை பலமாக அழுத்தி முதலுதவி கொடுத்ததில் வாலிபருக்கு இதய துடிப்பு சீரானது. பின்னர், அவர் 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு மன்னார்குடி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேற்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சை பார்த்த செவிலியருக்கு சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைத்து பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News