திருவாரூர்: பொட்டாஷ் உர தட்டுப்பாட்டைப்போக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் பொட்டாஷ் உர தட்டுப்பாட்டைப்போக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-12-21 04:46 GMT

வயலில் பொட்டாஷ் உரம் தெளிக்கும் விவசாயி.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம். இம்மாவட்ட விவசாயிகள் நெற்பயிர் சாகுபடியில் புயல், மழை, வெள்ளம், வறட்சி ஆகிய ஏதாவது ஒரு இயற்கை இடர்பாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகி பொருளாதார இழப்பீடுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் தெளிப்பு முறையிலும், நடவு முறையிலும் சுமார் 3.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 26 ந்தேதி தொடங்கியதிலிருந்து தொடர்ந்த 45 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையினால் மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 15,ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான தாளடி மற்றும் சம்பா பயிர்கள் நீரில் முழ்கின.

இத்தகைய சூழலில் விவசாயிகள் பயிரை சூழ்ந்துள்ள மழை நீரை வடியவைக்க இரவு பகல் பாராமல் பயிரை காப்பாற்றிட போராடினர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பயிரை சூழ்ந்துள்ள மழை நீரை வடியவைத்த போதிலும் பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட அடி உரம் கிடைக்காததால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு என்பது பூதாகர பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உரத்தட்டுப்பாடு நிலவுவதற்கு முக்கிய காரணம் ஒன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்காதது ஒருபுறம் என்றால், மற்றொரு புறத்தில் உரத்தை பதுக்கி தட்டுப்பாடு ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்று வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடை உரிமையாளர்களாலும் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ 1700 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாய பணியை தொடரலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் அரசு உரத்தட்டுபாட்டை போக்கிட தேவையான அளவு உரங்களை இறக்குமதி செய்வதோடு, தனியார் கடையில் உரங்களை விற்பனை செய்வதை தடுத்து அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்தால் மட்டுமே நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரை காப்பாற்றி அதன் மூலம் விவசாயிகளை பாதுகாக்க முடியும். இன்றைய சூழலில் அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டுமென்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags:    

Similar News