மன்னார்குடி – தேவதானம் வரை செல்லும் பேருந்தில் புகை வெளிவந்ததால் பரபரப்பு

மன்னார்குடி – தேவதானம் வரை செல்லும் தரமற்ற அரசு பேருந்தில் திடீரென புகை வெளியானதால் பயணிகள் பதற்றமடைந்தனர்

Update: 2022-03-02 16:39 GMT

மன்னார்குடி – தேவதானம் வரை செல்லும் அரசு பேருந்து

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்து தரமற்று இருப்பதால் அதில் பயணிக்கும் பொதுமக்களும், குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்களும் தினசரி பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை பொறுத்தவரை பராமரிப்பு இன்றி காணப்படுவதால் குறித்த நேரத்தில் பேருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் தினசரி பேருந்தின் உதிரிபாகங்கள் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பணிமனையில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது. இது குறித்து பேருந்து ஓட்டுநர்கள் மன்னார்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளிடம் எடுத்துகூறியும் பேருந்துகளை பராமரிக்க எந்தவித முன்னேச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று மாலை மன்னார்குடியில் இருந்து தேவதானம் கிராமத்திற்கு புறப்பட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவியர்களும், பொதுமக்களும் ஏறினர். ஆனால் இப்பகுதிக்கு போதுமான பேருந்துகளை இயக்கப்படாத காரணத்தால் அளவுக்கு அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் பேருந்தினை இயக்கிய போது திடீரென பேருந்தில் என்ஜினில் இருந்து புகை வெளியேறியது. இதைப்பார்த்த ஓட்டுநர் பேருந்தினை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் மன்னார்குடியில் இருந்து தேவதானம் செல்லும் பாதை ஆற்றங்கரையினையொட்டி அமைந்துள்ளதால் இப்பாதையில் தரமற்ற பேருந்துகளை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கிவருவதால் எந்த நேரத்திலும் இதில் பயணிக்கும் பொதுமக்களும், குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையினை அரசு கருத்தில்கொண்டு, தரமான பேருந்தினை இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

Tags:    

Similar News