மன்னார்குடி அருகே அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுனர் மீது தாக்குதல்

மன்னார்குடி அருகே அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-15 13:49 GMT
இளைஞர்களால் தாக்கப்பட்ட டிரைவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் காதலர் தினமான நேற்று காதலிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வந்துள்ளனர். அப்போது பேருந்து நிலையத்தில் நீடாமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் தர்மராஜ் பஸ் சக்கரத்தில் காற்றை சரிபார்த்து கொண்டிருந்தபோது காதலர் தினத்தை கொண்டாட வந்த இளைஞர்கள் குடிபோதையில் ஓட்டுநர் தர்மராஜின் முதுக்கு கீழே வேகமாக உதைத்துள்ளனர்.

இதில் கீழே விழுந்த தர்மராஜ் தலை மற்றும் முகம், மார்பு பகுதியில் பலத்த காயம் அடைந்துள்ளார். அப்போது பேருந்தில் உள்ளே இருந்த நடத்துனர் விஜயகுமார் இளைஞர்களை தட்டிகேட்டபோது அவர் மீதும் கொலை வெறியுடன் தாக்கி உள்ளனர்.

இதனை கண்ட அருகில் இருந்த புள்ளவராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர்களும், பேருந்தில் பயணம் செய்தவர்களும் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் வடுவூர் காவல்துறையில் புகார் தெரிவிக்கும் வகையில் பேருந்தை எடுத்துசென்ற போது தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மூன்று பேரும் தனது 15 க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பேருந்தை துரத்தி சென்று எடஅன்னவாசல் கிராமத்தின் வழியாக சென்ற பேருந்தை இடைமறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கண்மூடித்தனமாக இரும்புகம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இந்த தாக்குதலில் நடத்துனர் விஜயகுமார் தலை உடைக்கப்பட்டு இரத்தம் கொட்டிய நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரது உயிரை காப்பாற்றும் வகையில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள விஜயகுமாருக்கு மருத்துவர்கள் மண்டை உடைத்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கிராமத்தை விட்டு கிராமம் வந்து தனது காதலிக்கு காதலர் தினத்தில் வாழ்த்து தெரிவிக்க வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் நடத்திய வெறிச்செயல் தாக்குதல் வீடியோ சமூக வளைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில் வடுவூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விஸ்வா , மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும்  காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தாக்குதலில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News